Tuesday, December 28, 2010

Dinamani (23-03-2010): கட்டுரைகள் - குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் - அ.நாராயணன்

குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் 
அ.​ நாராயணன் 
Published : 23 Mar 2010


சில மாதங்களுக்கு முன் துணை முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர் போய் வந்த பின்,​​ சென்னையில் உள்ள கூவம்,​​ பக்கிங்ஹாம் கால்வாய்,​​ அடையாறு உள்ளிட்ட சாக்கடைகளைச் சுத்திகரிப்பதற்கான திட்டங்கள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கூவத்தை தெளிந்த நீரோடையாக்கி அதில் குழந்தைகள் நீந்தி விளையாடினால்தான் திருப்தி என்று முதல்வர் கூட ஓராண்டுக்கு முன் பேசினார்.​ ஏற்கெனவே,​​ சென்னை நகர நீர்வழிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடிகளை சில ஆண்டுகளுக்கு முன் கூவத்திலே கரைத்துள்ளது நமது அரசு.​ இப்பொழுது சென்னையின் நீர்நிலைகளைச் சுத்தம் செய்வதற்கு வேண்டிய பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ​ சிங்கப்பூர் மாதிரியின்படி,​​ புதிதாக சென்னை நதிநீர் அதிகார வாரியம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.​ இந்த நிறுவனத்தின் முதல் குறிக்கோளாக,​​ கூவம் சாக்கடையை ​(அடையாறு,​​ பக்கிங்ஹாம் அல்ல)​ ​ சுத்தம் செய்வதற்காக மட்டுமே மீண்டும் ரூ.1,200 கோடிகள் ஜவாஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னையில் நீர்நிலைகள் பராமரிப்பு பற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் அண்மையில் நடத்தப்பட்டது.​ இதில் பேசிய அதிகாரிகள் ​ கூவம் மாசுபட்டதற்கும்,​​ குறுகிவிட்டதற்கும் அதன் கரையில் உள்ள குடிசைப்பகுதிகளே முக்கிய காரணம் என்ற ரீதியில் பேசியுள்ளனர்.சேரி மக்களோ,​​ குழாய்த்தண்ணீர் கூட இல்லாமல்,​​ பிளாஸ்டிக் குடங்களும் கையுமாக லாரித்தண்ணீருக்காக தினமும் மணிக்கணக்காகக் காத்துக்கிடக்கிறார்கள்.​ தங்களின் முன்னேற்றத்துக்காக உழைக்க வேண்டிய நேரத்தை சில குடங்கள் தண்ணீருக்காக வீணடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள்.​ அவர்கள் எப்படி,​​ அதிக அளவில் நீர் நிலைகளை மாசுபடுத்தப் போகிறார்கள்?​ கூவத்தின் கரைகளை,​​ திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துவதைத்தான் அரசு சூசகமாகக் குறிப்பிடுகிறது என்று எடுத்துக் கொண்டால்,​​ இது அவர்கள் குற்றமா அல்லது ஏழைகளுக்கு வேண்டிய கட்டமைப்பு வசதிகளைத் தரமான வகையில் செய்து கொடுக்காமல்,​​ அவர்களை அழுக்கான சேரிகளாகவே பல ஆண்டுகளாக வைத்திருந்த அரசின் குற்றமா?ஏற்கெனவே,​​ குடிசைப்பகுதிகள் ஒவ்வொன்றாக அரசால் காலி செய்யப்பட்டு,​​ சென்னைக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளில் அம்மக்கள் குடி வைக்கப்பட்டு வருகிறார்கள்.​ அடுத்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 82,000 சேரி குடும்பங்கள் நகருக்கு வெளியே துரத்தப்பட உள்ளனர்.​ ஆனால்,​​ அந்த மாற்று இடங்களில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் கூட தரமாக,​​ நீண்டு நிலைக்கக்கூடியவாறு செய்யப்படவில்லை.​ சரியான திட்டமிடல் இல்லாமல் அவசர கோலத்தில் எடுக்கப்பட்டு வரும் இவ்வகை நடவடிக்கைகளால்,​​ மிகக் குறுகிய காலத்திலேயே புறநகர் ஏழைமக்களின் வாழிடச் சுற்றுச்சூழல் முன்பிருந்ததைவிட கேவலமாகி விடக்கூடிய அபாயமே உள்ளது.​ மேலும்,​​ புதிதாகக் குடியேற்றப்பட்ட புறநகர்ப் பகுதிகளில் வேலைவாய்ப்பு,​​ கல்வி,​​ குடிநீர் போன்றவை சரிவர இல்லாமல் அவர்கள் நிலைமை,​​ குறிப்பாக குழந்தைகளின் நிலைமை வேகமாக சீரழிந்து வருகிறது.மேலும் கூவத்தைச் சுத்தப்படுத்துவதற்கான முதற்கட்டமாக,​​ அரசு கடைப்பிடிக்கும் இந்த நடவடிக்கை தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் விதமாக உள்ளது.​ அதாவது,​​ கூவத்தில் வந்து கலக்கும் நீர் சாக்கடையாக இருக்காமல் தடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளுக்கு பதில்,​​ கூவக்கரைகளை மட்டுமே அழகுபடுத்தும் வேலையாக மருவி வருகிறது.​ குடிசை மக்களை முதலில் குண்டுகட்டாகப் புலம்பெயரச் செய்யும் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரான நியாயமற்றது மட்டுமல்லாது,​​ மேலோட்டமாகவும்,​​ குன்றா வளர்ச்சியைப் புறக்கணிக்கும் விதமாகவும் உள்ளது.​ ஏதோ,​​ சென்னையை மேல்தட்டு மற்றும் நடுத்தட்டு மக்களுக்காக மட்டுமே தயார் செய்யும் மனப்பான்மையே வெளிப்படுகிறது.​ குடிசைப்பகுதிகள் எல்லாம் அப்புறப்படுத்த வேண்டிய அசிங்கங்கள் எனும் குறுகிய பார்வை எல்லோரையும் உள்ளடக்கிய மேம்பாடு எனும் கருத்துக்கு நேர் எதிரானது.​ கடுமையான கண்டனத்துக்கு உரியது.சென்னையில் குடியேறியுள்ள ஏழை மக்களின் நீர் பயன்பாடு மிகமிகக் குறைவு.​ குழாய் நீராகட்டும்,​​ நிலத்தடி நீராகட்டும் அவை முழுவதுமே,​​ நடுத்தட்டு,​​ மேல்தட்டு மக்களாலும் பெரிய,​​ பெரிய வணிக வளாகங்களாலும்,​​ அரசு நிறுவனங்களாலும்தான் ஒழுங்கு முறையின்றி செலவு செய்யப்படுகின்றன.​ இப்பொழுது பெயர்த்தெடுக்கப்படும் குடிசைப்பகுதிகள் மட்டும்தான் விதிமுறைக்கு உள்படாமல் அரசு நிலத்திலோ,​​ புறம்போக்கு இடங்களிலோ வந்தனவா?​ பல அடுக்கு மாடிக்குடியிருப்புகள்,​​ வணிக வளாகங்கள் எல்லாம் மிகப் பெரிய அளவில் ஆக்கிரமிப்பு செய்தபடியும்,​​ விதிமுறைகளுக்கு உள்படாமலும் இஷ்டம் போல வளர்ந்துள்ளன எனும் உண்மை ஏன் கவனத்திற்கு உள்ளாவதில்லை?அடுக்குமாடிக் குடியிருப்புகளை நகருக்குள்ளேயே எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல் வளரவிட்டது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நெடுநாளைய குற்றம்.​ இப்படி வரைமுறையில்லாமல் கட்டடங்கள் முளைத்ததற்கும்,​​ ஊழலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே.​ நடுத்தர,​​ மேல்தட்டு மக்களின் ஜனத்தொகைக்கும்,​​ அவர்களது அதிகரித்து வரும் நுகர்வுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் சென்னை கழிவுநீர் வாரியம் திணறி வருவது கண்கூடு.​ கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறன்,​​ பாதாளச்சாக்கடைகளின் தரம் மற்றும் மேலாண்மை மிகவும் மோசமாக உள்ளது.சென்னை நகரம் கடல்மட்ட அளவில் தட்டையான நிலப்பரப்பு கொண்டது.​ அதனால்,​​ இயற்கையான நீர் ஓட்டம் இல்லாதது.​ சென்னை கழிவுநீர் வாரியத்தின் கீழ் 180 கழிவு நீரேற்று நிலையங்களும்,​​ 5 சுத்திகரிப்பு நிலையங்களும் இயங்குகின்றன.​ ஆனால்,​​ அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வளாகங்கள் வெளியேற்றும் பலகோடி லிட்டர் கழிவு நீரைத் தினமும் 24 மணி நேரம்,​​ 365 நாள்கள் தொடர்ச்சியாகப் பம்ப் செய்ய முடியாமலும்,​​ முழுமையாகச் சுத்திகரிப்பு செய்ய முடியாமலும் நிலையங்கள் திண்டாடி வருகின்றன என்பதுதான் நிதர்சனம்.​ அரைகுறையாகச் சுத்திகரிப்பு செய்வதற்கும்,​​ பராமரிப்புக்கும் செலவிடும் தொகைகளும்,​​ அதிக அளவு மின்சாரமும் விரயமாகி வருகின்றன.இப்பொழுது,​​ புதிய திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.​ இதில் சுமார் ரூ.​ 320 கோடி,​​ புதிய மழை நீர் கால்வாய் கட்டுவதற்கும,​​ ஏற்கெனவே உள்ள கால்வாய்களைச் சீர்செய்வதற்கும் செலவிடப்படுகின்றன.​ மற்றொரு 200 கோடி ரூபாய் கூவத்தின் கரைகளை மராமத்து செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வளவு காலம்,​​ பல கோடிகளை உலக வங்கியிடம் கடனாகப் பெற்று சென்னையிலும்,​​ பிற பகுதிகளிலும் அரசு ஏகப்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கு மழைநீர் கால்வாய்கள் கட்டியுள்ளது.​ நடைமுறையில் மழைநீருக்குப் பதிலாக ஹோட்டல்கள்,​​ வளாகங்கள்,​​ வீடுகள் என்று எல்லோருமே சட்டத்துக்குப் புறம்பாக கழிவு நீரை வெளியேற்றும் கால்வாய்களாகத்தான் இவை உள்ளன.​ மேலும்,​​ பிளாஸ்டிக் முதலான குப்பைகளை கொட்டிவைக்கும் தொடர் குப்பைத் தொட்டிகளாகவும் பயன்படுத்தப்படுகின்றன.​ இதனால் கோடிகளை விழுங்கியுள்ள மழைநீர் கால்வாய்கள்,​​ அவை கட்டப்படும் நோக்கத்தை முற்றிலும் இழந்துவிடுகின்றன.பொதுப்பணிகளில், ​​ உச்சகட்ட ஊழல் நிலவுவதாலோ என்னவோ,​​ பாதாளச் ​ சாக்கடை மற்றும் மழைநீர் கால்வாய் கட்டுமானப் பணிகளில் எந்தவிதமான தரக்கட்டுப்பாடும்,​​ மேற்பார்வையும் இருப்பதாகத் தெரியவில்லை.​ சாக்கடைகளும்,​​ அதன் மூடிகளும் ஏதோ நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பாதிப்புடன்தான் காட்சியளிக்கின்றன.​ நகர நிர்வாகத்துறையிலும்,​​ பொதுப்பணித்துறையிலும் இப்படிப்பட்ட ஊழல் இருக்கும் வரையில் கூவம் மட்டுமல்ல,​​ தமிழகத்தின் எல்லா நீர்நிலைகளும் தொடர்ந்து நாறப்போவது நிச்சயம்.துணை முதல்வர் தன் கீழ் வைத்திருக்கும் உள்ளாட்சி மற்றும் நீர்வழங்கல்துறை தொலைநோக்குப் பார்வையோ,​​ அறிவியல் அணுகுமுறையோ இல்லாமல் வெள்ளையானையாக உள்ளதாகவேபடுகிறது.​ ஐ.ஐ.டி.,​​ அண்ணா பல்கலைக்கழகம் போன்ற ஆராய்ச்சி நிறுவனங்களால் நாட்டுக்கு என்ன பயன் என்பதே புரியவில்லை?​ இதனால்தான்,​​ நாம் சிங்கப்பூர்,​​ மலேசியா என்று சாக்கடைநீர் நிர்வாகத்துக்கும்,​​ குப்பை மேலாண்மைக்கும் கூட தொழில்நுட்பத்துக்காக வெளிநாடுகளை அண்ட வேண்டியுள்ளது.திடக்கழிவு மேலாண்மையும்,​​ கழிவுநீர் மேலாண்மையும்,​​ நீர்நிலைகள் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற புரிதல் அரசுக்கு உள்ளதா என்ற சந்தேகம் வலுக்கிறது.​ திடக்கழிவு மேலாண்மைக்காக எந்தவித தொலைநோக்குத் திட்டமும்,​​ தெளிவான சிந்தனையும் இருப்பதற்கான அறிகுறிகள்கூட அரசிடமிருந்து வெளிப்படவில்லை.​ திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு மாற்றாக பாதாளச் ​ சாக்கடைத்திட்டங்கள் மட்டுமே என்ற அணுகுமுறையே முற்றிலும் தவறானது.​ குன்றா வளர்ச்சிக்குப் பங்கம் விளைவிப்பது.சுற்றுச்சூழல் சீர்கேடு எல்லோரையும் பாதிக்கிறது.​ ஆனால்,​​ சமூக பொருளாதாரத்தளத்தில் மிகவும் பின்தங்கியவர்களின் ஆரோக்கியத்தை முற்றிலுமாக குலைக்கிறது.​ ஏழைக்குழந்தைகளின் மேம்பாட்டை முறிக்கிறது என்ற புரிதல் அவசியம்.​ அருந்ததியர் மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடுதான் சமூக நீதி என்பதாக அர்த்தம் இல்லை.​ கழிவுநீர் மேலாண்மை,​​ திடக்கழிவு மேலாண்மை,​​ மாசுக்கட்டுப்பாடு,​​ கழிப்பிடப்புரட்சி,​​ இயற்கை பாதிப்பில்லாத வளர்ச்சி போன்ற எல்லா சுற்றுச்சூழல் நடவடிக்கையுமே சமூக நீதிக்கான ஒரு பயணம் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment